Monday, September 24, 2012

நான் ஹபி .....

மீண்டும் !

அநேக பிரயாசைகளுடன் .....

எழுத விழைகின்றேன் .....

Wednesday, November 10, 2010

OBAMA...

....................வந்துட்டு போனாங்களே ..... என்ன சொன்னாங்க....?

அவங்களா.... நாடு ரொம்ப நல்லாயிருக்கு, எல்லோரும் அன்போட உபசரிச்சாங்க ..... சாப்பாடு எல்லாம் நல்லா  இருந்துச்சு... பக்கத்து நாட்டுக்காரன் சரியில்லே. அவன் பண்ணுறது அடாவடிதான்.... அப்புறமா.......

இரு...இரு.... நீ யாரபத்தி  இப்போ சொல்லிக்கிட்டு இருக்கே...?

ஒபாமா வந்து போனத பத்திதான்...

அட கடவுளே....நான் கேட்டது ஒ(ன்)அப்பாம்மா   வந்துட்டு போனத பத்திடா.... லூசுப்பயலே....!

ஒ..... எங்க அப்பா அம்மா வந்து போனத பத்தியா....
அப்போ, மேல உள்ள வரிகள்ளே 'நாட்'டுக்கு பதிலா 'வீடு'ன்னு போட்டுக்க. அவ்வளவுதான்..

...அது சரி....!

Monday, November 8, 2010

naanhabi: கறை!

naanhabi: கறை!: " வங்கியின் வாசலுக்கு வந்து சேர்ந்த வேணுகோபாலன் அது இன்னும் திறக்கபடாதது கண்டு சற்றே ஆறுதல் அடைந்தவராக தன்னை ஆசுவாசப்படுதிகொண்ட..."

கறை!

               வங்கியின் வாசலுக்கு வந்து சேர்ந்த வேணுகோபாலன் அது இன்னும் திறக்கபடாதது கண்டு சற்றே ஆறுதல் அடைந்தவராக தன்னை ஆசுவாசப்படுதிகொண்டார்.

                  தன் கை கடிகாரத்தில் மணி பார்த்தார். பத்தாக இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. நல்ல வேளையாக  இன்னும் யாரும் வரவில்லை. நாம் தான் முதல் ஆள் என்று சுற்றும் முற்றும் பார்த்து உறுதி செய்து கொண்டபோதே இன்னும் இருவர் வருவது தெரிந்தது. 

                  பையில் பணம் பத்திரமாக இருக்கிறதா என ஒரு முறை தொட்டு பார்த்து உறுதி செய்துகொண்டவர் முகத்தை துண்டால் அழுந்த துடைத்துகொண்டார். மாதம் பிறந்ததும் ஐந்து தேதிக்குள்  வீட்டு  கடனை வங்கியில் கட்டவேண்டிய பொறுப்பு வயதான தனக்கு கொடுக்கபட்டாலும், அதை அவர் மனமுவந்துதான் ஏற்று கொண்டார். அந்த வேலையினால் சும்மா உட்கார்ந்திருக்கும் தனக்கும் சற்று பொழுது போகும், தன் பிள்ளைக்கும் இந்த வேலையின் பழு சற்றே குறையும். எனவே, இந்த வேலை ஒரு பொருட்டாக படவில்லை.

                       எப்போதும் ஆற அமற வந்து பணம் கட்டிவிட்டு செல்லும் அவருக்கு இந்த முறை மட்டும் உடனே திரும்ப வேண்டிய நிலை. எனவேதான் வங்கி திறக்குமுன்னமே வந்து நின்றுவிட்டார். அப்போதுதான் வங்கி திறந்ததும் உள்ளே நுழைந்து டோக்கன் மெசினில் முதல் நாலைந்து டோக்கனுக்குள் ஒன்றினை எடுத்து விட்டால் வந்த வேலை உடனே முடிந்து விடும். இல்லையேல், தன் நம்பர் வரும் வரை வெகு நேரம் காத்திருக்க வேண்டும். 

               இன்னும் ஓரிரு நிமிடங்களுக்குள் வங்கியின் வாயிலை திறந்து விடுவார்கள் என்று நினைத்தபடி எத்தனைபேர் உள்ளே நுழைய காத்திருக்கிறார்கள் என்று திரும்பிபார்க்கும் போது தான் அவனைப்  பார்த்தார்.

                 தன்னைத் தவிர உள்ள ஐந்தாறு  பேரில் ஒருவனாக அவன் நின்றுகொண்டிருந்தான். தோற்றத்திலியே சற்று முரடனாக இருந்தவனைப் பார்த்ததும் வேணுகோப்லனின் கை அனிச்சையாக தன் சட்டைப் பையை தொட்டுப்பார்து கொண்டது. சீக்கிரமாக கதவை திறந்துவிட்டால் தேவலை. உள்ளே போய் டோக்கனை எடுத்துவிட்டால் ஒரு பக்கமாக பத்திரமாக உட்கார்ந்துவிடலாம் என்று எண்ணியவருக்கு லேசாக வியர்த்தது.

                 வங்கியின் உள்ளிருந்து ஒருவர் கதவுப்பக்கம் வருவது தெரிந்தது. அப்ப்பாடா !  இனி கவலை  இல்லை.

                 வங்கியின் ஆள் கதவை திறந்துகொண்டிருக்கும்போதே கூட்டமாக எல்லோரும் கதவை நோக்கி நகர ஆரம்பித்தனர். அந்த முரட்டு ஆளும் முன்னேற தன் அருகில் வருவது தெரிந்தது. கூட்டம் இப்போது சட்டென்று மொத்தமாக உள்ளே நுழைய, தான் பின்னுக்கு தள்ளபடுவது கண்டு பொறுமை இழந்தார் வேணுகோபால்.  

                      'என்ன இது, கொஞ்சம்கூட நாகரிகம் இல்லாத மக்களாக உள்ளனரே. தான் முதலில் நிற்பது தெரிந்தும், ஒரு வயதானவன் என்ற நினைப்பு கூட இல்லாமல் இப்படி முண்டியடித்துக்கொண்டு நுழைகிறார்களே...' என்று  எண்ணியபடி தானும் உள்ளே நுழைய முற்பட, தன்னை முந்திக்கொண்டு அத்தனைபேரும்  நுழைய.... எங்கே நின்றிருந்தார்கள் இதனை பேரும்...? என்று எரிச்சலுடன் நினைத்தபடி உள்ளே நுழைந்து டோக்கன் மெசின்னை நோக்கி நகர.... தள்ளாடி நடக்கும் தன்னை இடித்தபடி அந்த முரட்டு பாதகனும் முன்னேறி முதல் ஆளாக முந்திக்கொண்டிருந்தான் . கோபம் கொண்டவராக அவனை முறைத்துப்பர்த்தார். அவனோ அவரைப்பார்த்து ஏளனமாக சிரிப்பது போல் தன் கறை படிந்த பல்லை இளித்தான்.

                    டோக்கன் மெசினை நெருங்குமுன்  பத்து பேருக்கு  மேல்  தனக்கு முன்னால் சென்று நின்று விட, உற்சாகம் அத்தனையும் இழந்தவராக தானும் வரிசையில் நின்றுகொண்டவர், தன் இயலாமையும் முதுமையையும் நினைத்து நொந்தவராக, முதலில் வந்தும் இப்படி ஆகிவிட்டதே என்றபடி ஏக்கத்துடன் மெசினைப் பார்த்தார். அந்த முரட்டு மூடன்தான் எல்லார்க்கும் முன்னதாக முதல் டோக்கனை எடுத்துக்கொண்டிருந்தான். அவனுக்கு பின்னால் இருப்பவர்கள் அவனைப்பார்த்து திட்டிகொடிருந்தனர். என்னவோ இவர்கள் மட்டும் நல்லவர்கள் மாதிரி...

                 ' என்ன செய்வது...சண்டாளர்கள்,  எங்கிருந்துதான் வருவார்களோ இப்படி எல்லோரையும் இம்சைபடுத்துவதற்கென்றே....அந்த மூடனுக்குத்தான்  அறிவு இல்லை என்றால், மற்ற சனங்களும் அப்படித்தானே இருக்கிறார்கள்....? ஒரு வயதானவனுக்கு மரியாதைகொடுக்கவேண்டாம், கொஞ்சம் பரிதாபம் படலாமல்லவா.....'

                                'ச்சே...திட்டம் எல்லாம் பாழாகபோனது... சீக்கிரமாய் வந்துதான் என்ன பிரயோஜனம்? இதுபோல முரட்டு ஜென்மங்கள் அறிவில்லாமல் வாழும் நாட்டில் பிறந்ததற்கு வருத்தப்படுவதை தவிர வேறு என்ன செய்யமுடியும்...?'  என்று எல்லோரையும் சபித்தபடி தன் சட்டை பையை தொட்டுப்........
                               
                                    'பகீர்' என்றது வேணுகோபாலுக்கு. அந்த முரடன் தனக்கு அருகினில் நின்று கொண்டிருந்தான். சட்டென்று அவர்  சட்டைப்பையை நோக்கி தன்   கையை கொண்டு சென்றவன் அவர் கையை பிடித்து .....

                     'என்ன இது...?'   எல்லோரும் டோக்கன் எடுக்கும் மும்முரத்தில் இருக்க, இவன் இப்படி செய்வதை யாரும் கவனிக்கவில்லையா' என தன் சட்டை பையை இருகபிடிக்குமுன் அவன் அவர் கையை பிடிக்க, அவர் கூச்சலிட எத்தனித்தபோது...... அவர் கையிலே....  அட. என்ன இது....? அவன் எதையோ கையில் திணிப்பதை போல தெரியுதே .... என்று தன் கையை பார்த்தார் வேணுகோபால்.

                  கையில்... வெள்ளை பேப்பராக....   'டோக்கன் போல தெரியுதே...'என மீண்டும் தன் கையைப்பர்ர்க்க .... ஆம்!  டோக்கனேதான் . அதுவும் நம்பர் 1  என்ற எண் கொண்ட டோக்கன்!

                 திரும்பிபார்த்தவர், அந்த முரடனை தேடினார்.

                 அவன் அங்கே ஒரு சீட்டில் அமர்ந்தபடி தன்னை பார்த்து சிரிப்பது தெரிந்தது. 'அடப்பாவி....!'  இவனைத்தான் இதுவரை என்னென்ன நினைத்து திட்டினோம்....  இவன் என்னடா என்றால்.... !

           மீண்டும் அவனை பார்க்க, அவன் இப்போதும் சிரித்துகொண்டிருந்தான்.  அவன் சிரிப்பில்...    அப்போது பற்களில் தெரிந்த அந்த கறையில்  .....
  
                      வேணுகோபாலனுக்கு அவன் அழகனாக, மனிதனாக  காட்சிதந்தான்.




                    
 
 
     

Wednesday, November 3, 2010

வழி வழி தீபாவளி....!

              அரக்க பறக்க முகத்தை அவசர அவசரமாக கழுவிக்கொண்டு தலையையும் வாரிக்கொண்டு வெளியில் ஓடினாள் செல்வி.
         
              'ச்சே ... நாம்தான் 'லேட்' டாகிவிட்டோம் . எல்லோரும் தொடங்கிவிட்டார்கள்' என்று அலுத்துகொண்டவளாக பட்டாசு பெட்டிகளை பார்த்தாள்.

               ஒன்று..இரண்டு..மூன்று.... மொத்தம் ஆறு பெட்டிகள். திருப்பதியாக இருந்தது செல்விக்கு.

             முதலில் எந்த பெட்டி...? வெடிகள்...! அதுதான் சரி. இருட்டுமுன் வெடிகளை விட்டுவிட்டால் இருட்டியபின் மத்தாபுகளை விடலாம்.

               குருவி வெடியில் தொடங்கி காதுகளை பிளக்கவைத்த சத்தம் அடுத்து வெடித்த அணுகுண்டுகளால் அதிரத்தொடங்கியது. அடுத்த சரவெடியில் அந்த ஏரியாவே கலகலத்துப்போக சத்தம் அடங்க ஐந்து நிமிடம் ஆனது. 'தௌசன் வாலா' வெடியை அனுபவிப்பது இதுதான் முதல் முறை. அம்மாடியோவ்...என்ன சத்தம்!

                   ஆயிற்று...ஒரு பெட்டி வெடிகள் முடிந்து போயின. இனி அடுத்த பெட்டி. அதிலே வேறு விதமான வெடிகள். அத்தனையும் புது ரகம். இந்த வருடம் தான் மார்கட்டுக்கு வந்த வெடிகள். ஒவ்வன்றாக வெடிக்க வெடிக்க செல்வி பூரித்துப்போனாள். அடுத்த பெட்டி ஆரம்பிக்கும் போது பொழுது சாய்ந்து இருட்டதொடங்கியதால், மத்தாப்புக்கள் வண்ண வண்ணமாய் சிதற...பூப் பூவாய் எதனை ஜாலங்கள்! கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம் ... அதில்தான் எத்தனை ரகம்! புஸ்வான மத்தாப்பு விடும்போதுதான் எத்தனை குதூகலம். சக்கரங்கள் சுழலும் போதெல்லாம் அதன் தெறிக்கும் சுடரில் ஓடி  ஓடி மிதித்து ஆரவாரம பண்ண எத்துனை மகிழ்ச்சி!

               அடுத்தது எல்லாம் ராகெட் வெடிகள். இந்த வருடத்து விசேசமே இந்த வெடிகள் தான். ஒவ்வன்றாய் பற்றவைக்க அது மேலே எழுந்து வெடித்து பூ பூவாய் சிதற எத்தனை நிறங்கள். ஆஹா... கண்கொள்ளா காட்சி....ஒவ்வொன்றும் ஒரு ரகம்.  வானமே  வண்ண வண்ண மலர்களால் நிரம்பியது போல ... மனதிற்குத்தான் எத்தனை மகிழ்ச்சி! போன வருட தீபாவளியை விட இந்த வருடம்தான் மிகவும் குதூகலமாக இருந்தது.

              இன்னும் இரண்டு பெட்டிகள் பாக்கியிருக்கும் போதுதான் அந்த குரல் கேட்டது.

              'எல்லாரும் சாப்பிட வாங்க..... சாப்பாட்டுக்கு அப்புறமா மீதியை வெடிக்கலாம்....'
             
              அதுவரை வெடிகளில் லயித்திருந்த மனது பசியை உணர்ந்தது.
            
               பக்கத்துக்கு தெருவில் வெடி விடுவதை இதுவரை வேடிக்கை பார்த்த செல்வி, வீட்டில் சாப்பிட பலகாரங்கள் ஏதாவது வந்திருக்குமா...என வாயில் நீர் ஊற கற்பனையுடன் தன குடிசையை  நோக்கி ஓட தொடங்கினாள்.

Thursday, October 28, 2010

நிதர்சனம்....

                   அலுவலகம் முடிந்து வெளியே வந்த நான், என் டூ வீலரின் நிலைமையை பார்த்து அதிர்ந்து போனேன். சரியாக வண்டியின் முன் பகுதி முழுவதும் வெள்ளையும் கருப்பும் கலந்து பெயிண்ட் கொட்டியது போல ... வள வளப்பாய் .... அருவருப்பாய் .....

                வேறென்ன?  ஏதோ ஒரு பறவையின் எச்சம்தான் .

              அனிச்சையாக என் பார்வை மேலே எழ, மேலே அந்த பறவை என்ன இன்னுமா உட்கார்ந்துகொண்டிருக்கும் வேடிக்கை பார்க்க? என்ன செய்வது...?    வழக்கம்போல் துணி எடுத்து துடைக்க முயற்சித்தேன். என்ன புண்ணியம். அது ஆசிட் போலே அப்படியே 'பச்சக்' என்று ஒட்டிகொண்டிருந்தது. இங்கும் அங்கும் திரும்பிபார்த்தேன். வேறு ஏதாவது வண்டிக்கு இப்படி சேதாரம் ஆகி உள்ளதா என தேடிபார்த்தேன். ம் ஹும்... நமக்கு வந்த துன்பம் மற்றவர்களுக்கும் வந்தால் கிடைக்கும் ஒரு ஆறுதல் கூட கிடைக்கவில்லை..  

                 துடைக்க துடைக்க கரை போகாததால் லேசாக ஆத்திரம் தலைக்கு ஏற என்ன செய்யலாம் என யோசித்தேன் . கோபம்தான் மிஞ்சியது . வீட்டில் போய் கழுவிப் பார்க்கவேண்டும் . போகவில்லைஎன்றால் சர்விசுக்குதான் விடவேண்டும் ... தெண்ட செலவு...நமக்கு மட்டும் ஏன் இப்படி ? மனம் வெதும்பியது. வண்டி வீட்டை  நோக்கி ஓட, என் சிந்தனையும் ஓடியது.

                எதையுமே பாசிடிவ் ஆக எடுத்துகொள்ளவேண்டும் என எத்தனை முறை படித்திருப்போம்? , எத்தனை முறை  கேட்டிருப்போம் ? இருந்தும் ஏன் மனம் இத்தனை ஆர்பாட்டம் பண்ணுகிறது? சரி! இதை அப்படியே பாசிடிவ் ஆக நினைத்துதான் பார்ப்போமே என சிந்தனை ஓட ...என் உள்மனம் சம்மனமிட்டு அமர்ந்தது. 

                எச்சமிட்ட அந்த பறவை நம் வண்டியில் ஏன் எச்சமிடவேண்டும்? அதற்கு ஏதாவது காரண காரியம் இருக்கத்தான் வேண்டும். இனி நான் என்ன செய்ய போகிறேன்? வண்டியை சர்விஸ் சென்டருக்கு கொண்டுபோக போகிறேன். அதனால் சர்விஸ் சென்டருக்கு என்னால் வருமானம். சர்விஸ் சென்டரில் வேலை செய்பவர்களுக்கு அதனால் சம்பளம் .. அந்த சம்பளத்தால் அவர்கள் குடும்பத்திற்கு சாப்பாடு..ஆக   , இது ஒரு செயின் ரியாக்சன் மாதிரி! எந்த ஒரு செயலும் ஒரு காரண காரியம் இல்லாமல் செயல் படாது. வண்டி சர்விசுக்கு போவதால் நான் பஸ்ஸில் போகவேண்டிவரும் , அதனால் பஸ் சுக்கு வருமானம். அதைகொண்டு பிழைப்பு கொண்டவர்களுக்கு அதன் மூலம் சில பயன்கள். இப்படித்தான் வாழ்க்கையில் எல்லாமே காரணமாகத்தான் நடக்கிறது. இதில் கோபம் கொள்ள ஏதும் இல்லை என மனம் அழகாக பாடம் சொன்னது.  மனம் ஆறுதல் அடைந்தது போல் இருந்தது.

                   அதேபோல மறுநாள் நான் வண்டியை சர்விசுக்கு விட பஸ்ஸில் பயணித்தேன். வண்டி இல்லாத நேரத்தில் மற்ற வேலைகள் எல்லாமே மாறி மாறி நடக்க என் மனமோ இது எல்லாமே ஒன்றின் விளைவுகள், விதிக்கப்பட்டவைகள் என ஓதிக்கொண்டே இருந்தது.  ஒரு வழியாக என் வண்டியும் சர்விஸ் முடிந்து வந்துவிட என் வழக்கமான பணிகளும் தொடர அனாவசியமாக ஒரு சின்ன நிகழ்வை கொண்டு எவ்வளவு கோபம் கொள்கின்றோம்? அதை பாசிடிவ் ஆக எடுப்பதனால் எவ்வளவு அமைதி... ஆனந்தம்....இதை ஏன் மனம் எப்போதும் எல்லா விசயங்களிலும் எடுத்துகொள்வதில்லை ? இதுபோல் எதையும் பாசிடிவ் ஆக எல்லோரும் எடுத்துகொண்டால் எவ்வளவு நலமாக இருக்கும். எந்த சண்டை சச்சரவும் வர வாய்ப்பே இல்லாமல் போய்விடும் அல்லவா?  உலகமே இதனால் அமைதி பூங்கா வாகி விடாதா?   என என் மனம் தான் எவ்வளவு பக்குவமாக உணர ஆரம்பித்தது!

                       ஆயிற்று, சாந்தமான என் மனம் அன்று முழுவதும் எல்லா வேலைகளையும் ஆனந்தமாக முடிக்க நான் அலுவலகம் விட்டு வெளியில் வந்து என் வண்டியை எடுக்........

                                             என்ன்ன இது? வெள்ளையும் கருப்பும் கலந்து பெயிண்ட் கொட்டியதுபோல...                                                  

(மேலே அண்ணாந்து பார்த்த நான் வேகமாக கீழே குனித்து நல்ல கல்லாக ஒன்றை தேடினதும், மறுநாள் முதல் 5 நிமிடம் முன்னால் வந்து வேறு இடத்தில் வண்டியை நிறுத்த தொடங்கியதும் வேறு கதை...)    .

Monday, October 25, 2010

மு. ஹபி: எல்லா புகழும் இறைவனுக்கே ! நானும் எழுத விழைந்து ,...

மு. ஹபி: எல்லா புகழும் இறைவனுக்கே !

நானும் எழுத விழைந்து ,...
: "எல்லா புகழும் இறைவனுக்கே ! நானும் எழுத விழைந்து , ஒரு பக்கத்தை பிரசவித்து, அதற்கு ஒரு பெயரிட்டு அழைக்க , இதோ கண் திறந்து பார்கிறேன் ! ..."